இளைஞரின் இடுப்பைச் சுற்றி 2 கிலோ தங்க நகை; வாகன சோதனையில் சிக்கியது!

தங்க நகைகள்
தங்க நகைகள்

சென்னையில் போலீஸார் வாகன சோதனையின் போது இளைஞர் ஒருவரின் இடுப்பில் சுற்றி மறைத்து எடுத்து வரப்பட்ட 2 கிலோ தங்கம் சிக்கியது.

வெளி நாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு அதிகளவில் தங்கம் கடத்தி வரும் செயல்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. வான் வழியாகவும், கடல் வழியாகவும் கடத்தி வரப்படும் தங்கக் கட்டிகள் அவ்வப்போது பிடிபட்டும் வருகின்றன.

சமீபத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 32 கிலோ தங்கம் தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட நிலையில் அவற்றை வருவாய் புலனாய்வுத்துறையினரும் இந்திய கடலோரக் காவல் படையினரும் இணைந்து பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு வட சென்னை வியாசர்பாடி பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அம்பேத்கார் கல்லூரி அருகே ஆட்டோவில் வந்த வாலிபர் ஒருவரிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணான பதிலை கூறியுள்ளார்.

இதனால் அவரை போலீஸார் சோதனையிட்ட போது அவரது இடுப்பை சுற்றி சில பார்சல்கள் கட்டப்பட்டிருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது அதில் சுமார் 2 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த ராஜூராம் என்ற அந்த இளைஞர் சவுகார்பேட்டையில் உள்ள ஒரு நகை கடைக்கு நகைகளை எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.

ஆனால் அந்த நகைகளுக்கு எவ்வித ஆவணங்களும் இல்லை. இதையடுத்து தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீஸார் அவற்றை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சென்னை எம்.கே.பி நகர் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in