
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மருத்துவ மாணவியை மதமாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட நபர் தனது உண்மையான பெயரை மறைத்து தன்னுடன் தொடர்பு வைத்துக் கொண்டதாக எம்பிபிஎஸ் மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் படிக்கும் போது சமூக வலைத்தளம் மூலமாக ஆதித்யா ஷர்மா என்ற நபருடன் அந்த மாணவி அறிமுகமானார். மேலும், அவரது ஆலோசனையின் பேரில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆனால், அவரது பெயர் ஆதித்யா ஷர்மா அல்ல, முகமது அக்லக் ஷேக் என்பது பின்னர் தெரியவந்தது. அந்த நபர் தனது உண்மையான பெயரை மறைத்து தன்னுடன் நட்பு வைத்துக் கொண்டதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும் எம்பிபிஎஸ் மாணவி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் லட்சுமி நகரில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு அந்த மாணவியை அழைத்து வலுக்கட்டாயமாக அத்துமீறியுள்ளார்.
மேலும், அக்லக் அந்த மாணவியின் தனிப்பட்ட படங்களை எடுத்து அவற்றை வைரலாக்குவேன் என்று மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில்தான் ஜனவரி 27 அன்று, அக்லக்கும் அவரது தந்தை முகமது மொயின் ஷேக்கும் தனது கல்லூரிக்கு வந்து தன்னை மதம் மாற வற்புறுத்தத் தொடங்கியதாக புகார்தாரர் கூறினார், மறுத்த காரணத்தால் அந்த மாணவியை அவர்கள் தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் டங்கூர் காவல் நிலையப் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டதாக கிரேட்டர் நொய்டா ஏடிசிபி தினேஷ் குமார் சிங் தெரிவித்தார்.