
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2022-ம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4.61 லட்சமாக உயர்ந்துள்ளது. சாலை விபத்துகளில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் நாட்டில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 1,68,491 உயிர்கள் பலியானதுடன் 4,43,366 நபர்களுக்கு காயங்களை ஏற்படுத்தி உள்ளன. இது முந்தைய ஆண்டை விட விபத்துகளில் 11.9 சதவீதம், இறப்புகளில் 9.4 சதவீதம் மற்றும் காயங்களில் 15.3 சதவீதம் என உயர்வு கண்டுள்ளது. இவை உட்பட 'இந்தியாவில் சாலை விபத்துகள் - 2022' என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சாலை பயணிகளை பதற வைக்கக்கூடியது.
குறிப்பாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக, அபாயகரமான சாலை விபத்தில் உயிரிழப்போர் மற்றும் காயமடைவோரில் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருக்கிறார்கள். அதாவது, 18 - 45 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இந்தியாவின் சாலை விபத்துகளில் 66.5 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மணி நேரமும் இந்திய சாலைகளில் 53 விபத்துகள் நேர்கின்றன. இந்த விபத்து காரணமாக மணிக்கு 19 உயிரிழப்புகள் பதிவாகின்றன
சாலை விபத்துக்களில் ஈடுபட்டுள்ள வாகன வகைகளில், 2022-ம் ஆண்டின் மொத்த விபத்துக்கள் மற்றும் இறப்புகளில், இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பெரும் பங்கைக் கொண்டுள்ளன. கார், ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.
அதிர்ச்சி அளிக்கும் இன்னொரு புள்ளி விவரம்: கடந்த 2022ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகளை பதிவு செய்திருக்கும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டைவிட விபத்துகளின் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும், சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் முன்னிலை வகிக்கிறது.
64,105 விபத்துகளுடன் அதிக எண்ணிக்கையிலான சாலை விபரீதங்களை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது. இரண்டாம் இடத்தில் 54,432 விபத்துகளுடன் மத்தியப் பிரதேசம் வருகிறது. சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் 22,595 உயிர்ப்பலிகளுடன் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. 17,884 உயிர்ப்பலிகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
டிடிஎஃப் வாசன் போன்று பைக் சாகசங்களிலும், அதிவேகத்திலும் கண்மூடித்தனமாக ஆர்வம் காட்டும் இளைஞர்களும் அவர்களின் குடும்பத்தாரும் யோசிக்க வேண்டிய தருணமிது. கூடவே டாஸ்மாக் உற்சாக உபயத்தால் நிகழும் விபத்துக்கள் குறித்து அரசும், இளைஞர் சமூகமும் நிறைய யோசிக்க வேண்டும்.
இதையும் வாசிக்கலாமே...
பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!
கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!
சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!
அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!