கி.பி 16-ம் நூற்றாண்டில் நீரை பங்கீடுவது எப்படி?- கண்டெடுக்கப்பட்ட 500 ஆண்டு பழமையான கல்வெட்டில் தகவல்

கி.பி 16-ம் நூற்றாண்டில் நீரை பங்கீடுவது எப்படி?- கண்டெடுக்கப்பட்ட 500 ஆண்டு பழமையான கல்வெட்டில் தகவல்

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வில்லூர் அருகே கி.பி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர் பங்கீடு முறையை பறை சாற்றும் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

வில்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை தனியார் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் உவரி பெரிய கண்மாயில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

கல்வெட்டு
கல்வெட்டு

இது குறித்து முனைவர் து. முனீஸ்வரன் கூறும்போது, "கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கலிங்கு பகுதியில் லிங்க வடிவ தனி தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. இக்கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்ததில், அது கி.பி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர் பங்கீடு முறை கல்வெட்டு என்பது தெரியவந்தது.

மேலும், உவரி பெரிய கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கிழக்கு பகுதியில் லிங்க வடிவம் கொண்ட தனி தூண் கல்லில் 5 அடி உயரம், 1 அடி அகலம், 6 வரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. இக்கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்தபோது முதல் இரண்டு வரிகள் முற்றிலும் தேய்மானத்துடன் காணப்பட்டது. 'காணியம் நீர் அளித்த பாணிக்கர் செய்த' என்ற எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

உவரி பெரிய கண்மாயில் இருந்து நீர் நிரம்பிய பிறகு அருகே உள்ள தென்னமநல்லூர், புளியங்குளம் கண்மாய்க்கு நீரோடை வழியாக செல்லும். இவ்வூருக்கு 'நீரை பணிக்கர்' என்ற இனக்குழுவினர் சரிபாதியாக பிரித்து கொடுக்கப்பட்டது என்பதை இக்கல்வெட்டு மூலம் அறியலாம். தற்போது, கண்மாயில் இருந்து கலிங்கு வழியாக மறுகால் பாய்ந்தாலும் ஒரே மாதிரியான நீர் வெளியேறும் கட்டுமானம் அமைந்து இருப்பது மற்றொரு சிறப்பு" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in