தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியை கடந்த 36 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது. கடந்த 21-ம் தேதி முதல் பொதுமக்கள் தீபாவளி கொண்டாடுவதற்காக சிறப்பு பேருந்துகளிலும், ரயில்களிலும் சொந்த ஊருக்கு சென்றனர். சென்னையில் நேற்று விடிய விடிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கச்சாவடியை கடந்த 36 மணி நேரத்தில் 1.60 லட்சம் வாகனங்கள் கடந்து சென்றதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
நாள்தோறும் இந்த சுங்கச்சாவடியை 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே கடந்து செல்லும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் தீபாவளியொட்டி இந்த எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் ஏராளமானவர்கள் தங்க சொந்த கார்களில் ஊருக்கு திரும்பியதே இந்த வாகன அதிகரிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. சுமார் 70 ஆயிரம் கார்கள் சுங்கச்சாவடியை கடந்து சென்றிருக்கலாம் என்றும் சுங்கத்துறையினர் கூறுகின்றனர்.