கல்குவாரி குடோனில் பதுக்கப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கல் குவாரி குடோனில் பதுக்கிய ரேஷன் அரிசி மூடைகள்
கல் குவாரி குடோனில் பதுக்கிய ரேஷன் அரிசி மூடைகள்

ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் கல்குவாரி குடோனில் பதுக்கிய 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் ஆய்வுக்குச் சென்றார். அப்போது எதிரே வந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்தார். ஓட்டுநர் முரணாக பதில் அளித்தார். 

வாகனத்தை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. அருகே உள்ள கல்குவாரியில் இருந்து அரிசி மூடைகளை எடுத்து செல்வதாக ஓட்டுநர் கூறினார். இதன் பேரில் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன், துணை வட்டாட்சியர் கோதண்டராமன் ஆகியோர் போலீஸாருடன் கல் குவாரியில் சோதனை நடத்தினர்.

குடோனில் ரேஷன் அரிசியை சாக்கு மாற்றி மூடைகளாக கட்டி அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. சரக்கு வாகன ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி கள்ளச்சந்தையில் விற்க குடோனில் பதுக்கியது தெரியவந்தது. குடோனில் இருந்த 250 மூடை ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்தில் கடத்திய 35 மூடை ரேஷன் அரிசி என 15 டன் ரேஷன் அரிசி சரக்கு வாகனத்தை வருவாய்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உணவு பொருள் கடத்தல் குற்றபுலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

கல்குவாரியில் நடத்திய ஆய்வில் அனுமதியின்றி சிலை செய்ய பெரிய அளவிலான கற்கள் இரவில் வெட்டி எடுத்து செல்வது தெரிய வந்தது. இதையடுத்து கற்களை எடுத்து சென்ற லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குவாரி உரிமையாளர், தப்பி ஓடிய ஓட்டுநர் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in