ரயில் பயணியிடம் ஜன்னல் வழியாக செல்போனைப் பறிக்க முயன்ற திருடன், அதே ரயியில் 15 கி.மீ தூரம் தொங்கியவாறு கதறிக் கொண்டே பயணம் செய்த வீடியோ இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
பிஹார் மாநிலம் பெகுசராயிலிருந்து ககாரியா வரை ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் சத்யம் குமார் என்ற பயணி பயணம் செய்துள்ளார். சாஹேப்பூர் கமால் ஸ்டேஷன் அருகே சத்யம் குமார் கையில் இருந்த செல்போனை ரயிலுக்கு வெளியே இருந்து ஒருவர் பறிக்க முயற்சித்துள்ளார். ஆனால், அதற்குள் சத்யம் சுதாரித்துக் கொண்டு அந்த திருடனின் கைகளைப் பிடித்துக் கொண்டார். இதைப் பார்த்த ரயிலில் இருந்த மற்றொரு பயணியும் திருடனின் மற்றொரு கையைப் பிடித்து உள்ளே இழுத்தார்.
இதனால் தன்னை விட்டுவிடும்படி திருடன் கெஞ்சினார். அதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. இப்போது தனது கைகளைத் தயவுசெய்து விட்டுவிடவேண்டாம் எனக் கதறி திருடன் மன்னிப்புக் கேட்டார். இதனால் 15 கி.மீ தூரம் ஜன்னல் வெளியே தொங்கியபடி திருடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுவரை பயணிகளும் அவரது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டனர்.
அந்த ரயில் ககாரியாவுக்கு அருகே வந்தபோது அவர் கைகளை பயணிகள் விட்ட போது திருடன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து ககாரியா ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட திருடனைத் தேடி வருகின்றனர். ரயிலுக்கு வெளியே திருடன் தொங்கியபடி பயணிக்கும் 13 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.