திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற சுங்கத்துறை சோதனையில் 35 பயணிகளிடம் இருந்து சுமார் 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. திங்கள் கிழமை இரவு சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா நாடுகளில் இருந்து வந்த மொத்தம் 7 சர்வதேச விமானங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி வந்தனர்.
அப்போது வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பெயரிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் அனைத்து பயணிகளிடமும் சுங்கத்துறையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
இதில், சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 35 பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அவர்களிடம் சுமார் 15 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.
அனைத்து விமானங்கள் மற்றும் பயணிகளிடம் நடைபெற்ற இந்த சோதனை திங்கள் இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரையிலும் தொடர்ந்தது. இதில் மொத்தம் 15 கிலோ தங்கம், பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் பயணிகள் உரிய வரி செலுத்தி வாங்கி செல்லும் தங்கமும் இருப்பதால் அவை போக மீதம் ஏழு கிலோ அளவுக்கு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் இதேபோன்று நடைபெற்ற சோதனையில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக அளவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.