
மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்13 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கடற்பரப்பில் மீன்பிடிக்கும் மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்து வருகிறது. குறிப்பாக, ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அத்துடன் அவர்களின் படகுகள், வலைகள், மீன்கள் மற்றும் அவர்களது உடமைகளைப் பறிமுதல் செய்து வருகிறது.
தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன் அவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடரும் மீனவர்கள் கைது நடவடிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.