தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசோடு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி கார்டு தாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு வெல்லம், மற்றும் ரொக்கப் பணம் போன்ற பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக மளிகைச் சாமான்கள், கரும்பு, நெய் மற்றும் வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை.
அத்துடன் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்ற முறையில் இருந்ததாக எதிர்கட்சி புகார் தெரிவித்தது. இதன் காரணமாக பொருட்களைச் சப்ளை செய்த நிறுவனங்கள் மீது புகார் எழுந்தது. இந்த நிலையில், நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்போடு ரேஷன் கடைகளில் மஞ்சள் பையை வழங்கவும் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.