மத்திய சுகாதார அமைச்சகமும், மாநில சுகாதார மையமும் தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா வார்டுகளில் தேவையான வசதிகளை செய்ய அறிவுறுத்தியிருந்தது. அந்தவகையில் நாகர்கோவில், ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸின் திரிபான பி.எப் 7 சீனாவில் வேகமாகப் பரவிவருகிறது. சீனாவைத் தொடர்ந்து ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கூட்டம் போட்டுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் போதிய படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி இருந்தார். வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோரும் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் இப்போது கரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில் 5 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் பி.எப் 7 திரிபு தொற்றாளர்கள் இல்லை. இதனிடையே மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்பேரில் நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையத்தில் 100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 20 படுக்கைகளில் வென்டிலேட்டர் உள்பட அதிதீவிர சிகிச்சை வசதிகள் உள்ளன. 40 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதிகளும், 40 படுக்கைகளில் சாதாரண வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு ஆக்சிஜன் நிரப்பகங்களும், 3000 லிட்டர் கொண்ட ஒரு ஆக்சிஜன் நிரப்பகமும் செயல்பாட்டில் உள்ளது. இதுபோக நிமிடம் ஒன்றுக்கு ஆயிரம் லிட்டர் மற்றும் 550 லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் உற்பத்தி மையமும் உள்ளது எனவும் சுகாதாரத்துறை சார்பில் அறிவித்துள்ளனர். மக்கள் அச்சப்பட வேண்டியது இல்லை. இது எல்லாம் நம்மிடம் இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் குறித்த விழிப்புணர்வுதான் எனவும் கூறப்பட்டுள்ளது.