2019-ல் 10 ஆண்டு தண்டனை; 2022-ல் உறுதி: கஞ்சா கடத்தல்காரர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி

2019-ல் 10 ஆண்டு தண்டனை; 2022-ல் உறுதி: கஞ்சா கடத்தல்காரர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி

கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை சீரநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீரபத்திர சாமி கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார், அதிவேகமாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர். அந்தக காரில் 216 கிலோ கஞ்சாவும், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த இருளாண்டி, தர்மர், பந்தீஸ்வரன், சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிமன்றம், இருளாண்டி, தர்மர், பந்தீஸ்வரன், சதீஷ்குமார் ஆகிய நான்கு பேருக்கும் தலா பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இருளாண்டி உள்ளிட்ட நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் சாட்சியங்களில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் உள்ளதாகவும், விசாரணை நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதாலும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 216 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட இந்த வழக்கில் சாட்சியங்களில் உள்ள சிறு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி, வழக்கு நிரூபிக்கப்படவில்லை என கூற முடியாது என தெரிவித்து, நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in