`என் வெற்றிக்கு மனைவிதான் காரணம்'- இயக்குநர் கஸ்தூரி ராஜா சொன்ன தகவல்

நிகழ்ச்சியில் பேசும் கஸ்தூரி ராஜா
நிகழ்ச்சியில் பேசும் கஸ்தூரி ராஜா

``நெருப்பைப் போல் கனன்றுகொண்டே இருப்பவன் தமிழன், இந்த உலகின் முதல் குடிமகன் தமிழன். தமிழர் வாழ்வு வீரம் செறிந்தது, தமிழர் வாழ்வு பொருள்மிக்கது, உலகிற்கே நாகரிகம் கற்றுத்தந்தவன் தமிழன்'' என திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா நெல்லையில் இன்று நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த்துறைகள் இணைந்து மாணவர் வாசகர் வட்ட நிகழ்ச்சியை நடத்தின. இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசும்போது ,“நெருப்பைப் போல் கனன்றுகொண்டே இருப்பவன் தமிழன், இந்த உலகின் முதல் குடிமகன் தமிழன், தமிழர் வாழ்வு வீரம் செறிந்தது, தமிழர் வாழ்வு பொருள்மிக்கது, உலகிற்கே நாகரிகம் கற்றுத்தந்தவன் தமிழன். தமிழ் மண் வாழ்க்கையை, தமிழர் வாழ்க்கையை பாமர இலக்கியமாகப் படைத்துள்ளேன்.

ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கும் பெண் குழந்தைக்குமான உறவு புனிதமானது. அவள் தன் சகோதரனாக அக்காளையைக் கருதினாள். யாருக்கும் அடங்காத காளை பெண்ணுக்கு அடங்கியது. அவள் திருமணம் நடக்கவேண்டுமானால் அந்தக் காளையை அடக்கியாகவேண்டும். அரியவகை நாற்பது நாட்டுமாடுகள் குறித்து எழுதியுள்ளேன்.
தமிழ்நாட்டில் இருந்துதான் உலக நாகரிகம் பரவியது. என் சாதி, என் மதம் என்பதைத்தாண்டி சகோதர சமயத்தை மதிக்கவும், அவர்களை உறவுப்பெயர் சொல்லி அழைக்கவும் என் கிராமம் எனக்குக் கற்றுத்தந்தது. என் நண்பர்களில் பலர் இஸ்லாமியர்கள், திரைத்துறையிலே நடிகர் ராஜ்கிரண் என்மீது பேரன்புகொண்டவர். என் வாழ்வின் வழிகாட்டி அவர்தான். சமய நல்லிணக்கம் இன்றைய தேவை. தமிழ் நம்மை உயிர்த்துடிப்போடு என்றும் இளமையாக வைத்திருக்கிறது.
மனஅழுத்தம் வராமல் இலக்கியம் காக்கிறது. வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கு மனிதம் என்கிற சொல் காரணமாகிறது.

தேனி மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமத்திலிருந்து சென்னைக்குக் காலடி வைக்கும்போது என் பையில் ஒருரூபாய்தான் இருந்தது. கடின உழைப்பு சிகரத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. மனைவி சொன்னால் கேளுங்கள் எனும் ரகசியத்தை என் தாத்தா, என் அப்பாவுக்குச் சொல்லி அவர் எனக்குச் சொன்னார், அதுவே என் வெற்றிக்குக் காரணம். பெண்தான் எல்லாமே, பெண் இல்லை என்றால் எதுவுமே இல்லை. தாய்மையைப் போன்ற வரம் ஏதும் இல்லை. பெண் கல்வியே சமுதாயத்தை உயர்த்தும். தாய் தந்தையர் வளர்ப்புதான் நம் வாழ்வில் உயர்வுதரும். தாய் அன்புவயப்பட்டவள், தந்தை கண்டிப்பானவர், தந்தையின் அன்பின் ஆழம் அறியமுடியாதது. தாய் தந்தையர் வளர்ப்பு சரியாக இருந்தால் பிள்ளைகள் வகுப்பில் சரியாக நடப்பர். கல்லூரி நாட்களில் நம் திறமையை வளர்த்துக்கொண்டால் வெற்றி நிச்சயம். உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் பயின்றபோது நான் எழுதிய வெண்பா இன்று என்னை இலக்கியம் எழுதவைத்தது. அதுவே திரைப்படங்களுக்கு வசனம் எழுதவைத்தது. வாசிப்பு இல்லை என்றால் இது சாத்தியமில்லை. பிள்ளைகளைப் பேணி வளர்ப்பதில் இன்று கவனம் இல்லாமல்போய்விட்டது.

இளம் குற்றவாளிகள் உருவாவதற்குக் காரணம் குழந்தைகள் வளர்ப்பில் உள்ள குறைபாடுதான். மூவாயிரம் பக்கங்கள் எழுதிய கிராமத்து வாழ்வின் தொகுப்பே பாமர இலக்கியம். நூறு ஆண்டுகளாகக் கலாச்சாரம் சிதைந்து அழிந்துகொண்டிருக்கிறது. நம் உணவுப்பொருட்கள் மாறி பீசா, பர்கர் என்று போய் நிற்கிறது. ஆடைகள் அணிந்தும் நாம் நிர்வாணமாய் நிற்கிறோம் ஏன்? கிழிந்த உடையைத் தைத்துப் போட்டது அந்தக்காலம், இருக்கும் ஆடையைக் கிழித்துப் போடுவது இந்தக் காலம். என் கலப்பை, என் மண், என் இயற்கை என்றும் என் நிம்மதி தருவது. என் இலக்கியம் மண் சார்ந்தது. எழுத எழுத தமிழ் நம்முள் ஊற்றெடுக்கும். எழுதுகிறவனே இந்த உலகில் நிலைத்து நிற்கிறான். இறந்தும் நாம் வாழவேண்டும் என்றால் எழுதவேண்டும், நிறைய வாசிக்கவேண்டும்” என்றார்.

தொடர்ந்து பாமர இலக்கியம் நூல் குறித்து பத்து மாணவ- மாணவியர் கருத்துரை வழங்கினர். தமிழ்பண்பாடு, நூல் உருவாக்கம், வாசிப்பு இயக்கம் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு, திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா விளக்கம் அளித்து உரையாடினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in