
நவம்பர் 12ம் தேதி தீபாவளியன்று காசியில் கங்கா ஸ்நானம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ஆன்மிக சுற்றுலா ரயில் புறப்பட்டது.
கங்கையில் புனித நீராடுவதும், காசி விஸ்வநாதரை தரிசிப்பதும் இந்துக்களின் கடமைகளுள் ஒன்றாகவே இருந்து வருகிறது. வாழ்நாளில் ஒருமுறையேனும் காசி யாத்திரை செல்ல வேண்டுமென்பது பலரது கனவாக இருந்து வரும்நிலையில், வடக்கே உள்ள காசி விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்காகவே ஐஆர்சிடிசியின் மூலமாக பாரத் கவுரவ் யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், தென்காசியில் இருந்து வாரணாசிக்கு, 'தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை' என்ற பெயரில் பாரத் கவுரவ் யாத்திரை ரயில் நேற்று இயக்கப்பட்டது.
ஐஆர்சிடிசியின் 'தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை' ரயில் நேற்று தென்காசி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூர், சிதம்பரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், விஜயவாடா, பிரயாக்ராஜ் வழியாக சென்று நாளை நவம்பர் 11ம் தேதி இரவு 10.30 மணிக்கு வாரணாசியை அடையும்.
இந்த ரயில் பயணம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், கயாவில் உள்ள விஷ்ணு பாதை கோயில் ஆகியவைகளில் தரிசனம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் நவம்பர் 13ம் தேதி இரவு 11.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கயா, சம்பல்பூர், விஜயவாடா, சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், ராமேஸ்வரம் வழியாக நவம்பர் 17ம் தேதி இரவு தென்காசி வந்தடைகிறது. காசி யாத்திரை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த ரயிலுக்கு ஆன்மிக அன்பர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.