
பெத்த மனசு
மகன் போட்ட
அன்னையர் தின
வாழ்த்து ஸ்டேட்டஸுக்கு
லைக் கிடைத்தது
முதியோர் இல்லத்தில் இருந்த
அம்மாவிடமிருந்து!
- பாளை பசும்பொன்
முதலும் முடிவும்
சுப நிகழ்வொன்றை
குத்து விளக்கேற்றி
தொடங்கிவைத்த
மெழுகுவர்த்தியின் மிச்சம்
அஞ்சலி செலுத்தியபடி
நீடிக்கிறது
மற்றுமொரு பொழுதில்...
- சாமி கிரிஷ்
பிம்பங்கள்
புதிதாக மீன்தொட்டி
வாங்கி குளத்து மீன்களை
பிடித்து வளர்த்தார் பணக்காரர்
பாசி உண்ணாமல்
பட்டினி கிடந்தாலும்
குளமென்றே
நீந்திக்கொண்டிருந்தன
மீன்கள்...
- கா.கவிப்ரியா
குவளைக்கடல்
தளும்பத் தளும்ப
நீரோடு அச்சமும்
நிறைந்திருப்பதால்
குவளையின்
நுனியில் தாகத்தோடே
ஊர்ந்து திரிகிறது
எறும்பு!
- ரகுநாத் வ
தவம்
உளி பட்ட வலிகள்
அதன் முனையளவும்
பேசப்படவில்லை
கருணை கசிய
போற்றப்படுகிறது
சிற்பம் ஆகிட
கல் பட்ட வலி!
- வீ.விஷ்ணுகுமார்
இரு சொற்கள்
இவ்வளவு காலம்
பகையாளியாக
இருந்த வீட்டின்
படியேறக் கால்கள்
தடுமாறும்போது
தாங்கிப் பிடிக்கிறது
‘வாங்க' எனும் சொல்...
நீட்டும் பத்திரிகையை
நடுங்கியபடி
எடுக்கும் கைகளை
ஆதரவாய்ப் பற்றிக்கொள்கிறது
'வந்துடுங்க' எனும் சொல்.
- ந.சிவநேசன்
புன்னகை
வெய்யிலில் தப்பிய
மேய்ப்பர்கள்
ஓய்வெடுக்கவென
தனது நிழலில்
அமரும் வேளையிலும்
பட்டாம்பூச்சிகளில் சில
தன் மீசையோரம்
சிறகடிக்கும்பொழுதும்
திருவிழாக்கால உற்சாகம்
குடியேற கம்பீரமாகச்
சிரித்துக்கொள்கிறார்
காட்டு மாடசாமி.
- கி.சரஸ்வதி