பாராமுகமாய் விடப்பட்ட பழங்குடிகள்: சொந்த நாட்டின் அகதிகளாய் வாழும் அவலம்!

இது மண் திட்டு கிராமத்தின் சோகம்
பாராமுகமாய் விடப்பட்ட பழங்குடிகள்: சொந்த நாட்டின் அகதிகளாய் வாழும் அவலம்!

பழங்குடிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக பகட்டாய் பலப் பல திட்டங்களை அறிவிக்கிறது அரசு. ஆனால், அந்தத் திட்டத்தின் பலன்கள் அவர்களுக்குப்போய்ச் சேர்கின்றனவா என்று பார்க்கத்தான் ஆளில்லை. அத்தகைய பாராமுக யோகத்தில் தான் நித்தமும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள், மண் திட்டு கிராமத்தில் வசிக்கும் பழங்குடி குடும்பங்கள்.

திருப்பூர் - திண்டுக்கல் மாவட்டங்களை இணைக்கும் ஆண்டிப்பட்டி ஊராட்சிக்குள் இருக்கிறது மண் திட்டு கிராமம். பாலை நிலம் போன காணும் சிறிய மலைக்குன்று தான் இந்த கிராமம். இங்கு, 29 பழங்குடி குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில் 4 முதல் அதிகபட்சமாக 12 பேர் வரை இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள ஒரு சிலருக்கு மட்டும் அரசு சார்பில் கட்டத் தொடங்கிய பசுமை வீடுகளும் பாதியிலேயே நிற்கின்றன. இன்னும் சிலரோ, தங்களுக்காக கட்டம்போட்டுக் கொடுத்த இடத்தில் கம்புகளை ஊன்றி பழைய சாக்குப் பைகளை கூரையாக மூடி அதற்குள்ளே குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் இங்கிருப்பவர்கள் சொந்த நாட்டின் அகதிகள் கணக்காய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வனத்துக்குள் ஆடு மாடுகள் மேய்த்தும், சீமாறுக்கான மூலப்பொருட்களைச் சேகரித்தும் இவர்கள் ஏதோ தங்கள் வயிற்றைக் கழுவுகிறார்கள். போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், சிறுவர்களின் கால்களில் விஷச் செடிகள் கிழித்து கால்கள் புண்ணாகி சீழ்வடித்துக் கொண்டு அலைகிறார்கள். இவர்களுக்கு எவ்வித மருத்துவ உதவியும் செய்துகொடுக்க ஆளில்லை. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர் கவனிப்பாரின்றி வீடுகளில் தனிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

இந்தப் பூர்வகுடி மக்களுக்கு ஏன் இந்த அவலம்?

இதற்கு பதில் சொன்னார் அங்கு வசிக்கும் மாரியப்பன். “நாங்க ஆண்டாண்டு காலமா வனத்துக்குள்ள வசிச்சோம். அதை விட்டு வெளியே வந்தா, எங்க வாழ்க்கையில பாலாறும் தேனாறும் ஓடும்னெல்லாம் சொன்னாங்க. அதையும் நம்பி இந்த மண் திட்டுப் பாறைக்கு வந்து 40 வருசம் ஓடிருச்சு. எங்கள வெச்சு அரசியல்வாதிங்க தான் பிழைக்கிறாங்களே தவிர, எங்களுக்கு எதுவும் நடக்கல. வந்த நாளா நாங்க இப்படியே தான் இருக்கோம்” என்றார் மாரியப்பன்.

மாரியப்பன்
மாரியப்பன்

அடிப்படை வசதி, மருத்துவம், கல்வி என இந்த மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த அடிப்படை உரிமையுமே கிட்டாமல் மறுக்கப்படுவது குறித்து, நம்மிடம் விரிவாகப் பேசினார் பழங்குடியின நல ஆர்வலரும், வழக்கறிஞருமான தனராஜ்.

"1990-களுக்கு பின்னர் இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் பெருமளவு ஸ்டெர்லிங் கார்ப்பரேட் கம்பெனிக்கு கை மாறியதால், இவங்க பாரம்பரியமாக வசித்த இடங்களும் செல்லும் வழித்தடங்களும் பறிக்கப்பட்டு இந்த மண் திட்டுக்கு கட்டாயமாக கடத்தப்பட்டுருக்காங்க. இந்த இடத்துல சிலருக்கு அரசு பட்டா நிலம் வழங்கி இருக்கு. சிலருக்கு வீடும் கட்டிக் குடுத்துருக்காங்க. அதில் 7 வீடுகளை மூணு வருசமா பாதியிலேயே போட்டு வெச்சிருக்காங்க. இவங்களுக்குன்னு பாதுகாக்கப்பட்ட கழிப்பறை வசதி ஏதும் கிடையாது. பேருக்குத்தான் அங்கன்வாடி மையம் இருக்கு. அது செயல்படுவதே இல்லை.

திறக்கப்படாத அங்கன்வாடி
திறக்கப்படாத அங்கன்வாடி

மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டு 3 அடி சுற்றளவுள்ள தகர கொட்டகையில் வசிக்கிறார் ஒரு முதியவர். அதற்கு எதிரே தன்னந்தனியே வீட்டில் முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண். காலில் விபத்தில் அடிபட்ட காயத்துக்கு சிகிச்சை எதும் எடுக்காத பொடியன். காலில் சிரங்குப் புண்ணோடு அவதிப்படும் இன்னொரு சிறுவன். இத்தனை துயரங்களோடு வசிக்கும் இந்த மக்களைப் பார்க்கும்போது, நெஞ்சம் பதறுது. சுதந்திர இந்தியாவில் தான் இருக்கிறோமான்னுகூட சந்தேகம் வருது. பூர்வகுடிகளான இந்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனியும் அனுமதிக்க முடியாது. இவங்களுக்கான நியாயங்களை வென்றெடுக்க விரைவில் சட்டப் போராட்டத்தை நீதிமன்றத்தின் வழியாக தொடங்குவோம்" என்றார் தனராஜ்.

போகிற வழியில் போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் ஆய்வுக்குச் செல்லும் முதல்வர், பாவப்பட்ட இந்தப் பழங்குடி மக்களுக்கும் ஒரு பாதையைக் காட்டட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in