
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டரிலுள்ள கணக்குகளில் 5 சதவீதம் போலியானவை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சனம் செய்து வந்தார் எலான் மஸ்க். மேலும் ட்விட்டர் நிறுவனத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லை எனக் கூறி வந்தார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாகத்தான், ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை அவர் வாங்கினார். ட்விட்டரில் இருந்து போலிக்கணக்குகளை நீக்குவதே தன்னுடைய முதல் வேலை என எலான் மஸ்க் முன்பு பேசியிருந்தார். அவரின் அடுத்த முயற்சியாக ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 44 மில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் 50 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியைக் கண்டது.
இந்த நிலையில் அவரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் "ட்விட்டர் தளத்தில் இருக்கும் கணக்குகளில் சுமார் 5 சதவீதக் கணக்குகள் போலியானவை. ட்விட்டருடனான ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் கடுமையான வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.