புவிசார் அரசியல் அழுத்தத்தால் ஐநா அமைப்பு நொறுங்குகிறது - இந்தியா ஆதங்கம்!
ஐநா அமைப்பு, குறிப்பாக அதன் பாதுகாப்பு கவுன்சில், 21ம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் அழுத்தத்தின் சுமையை தாங்க முடியாமல் நொறுங்கிக் கொண்டிருக்கிறது என பொதுச்சபை கூட்டத்தில் இந்தியா கூறி உள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஐநா பொதுச் சபை கூட்டத்தில், ‘பொதுச் சபையின் பணிக்கு புத்துயிர் அளிப்பது’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.
இதில், ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர ஆலோசகர் பிரதிக் மாத்தூர் பேசுகையில், ‘‘ஐநா பொதுச் சபையானது அதன் அடிப்படை பொறுப்புகள் மற்றும் செயல்முறையில் இருந்து படிப்படியாக தொடர்பை இழந்து வருகிறது என்கிற கருத்து அதிகரித்து வருகிறது. எனவே, பன்முகத்தன்மை, மறுசீரமைப்பு, நியாயமான உலகமயமாக்கல் மற்றும் சீர்த்திருத்தம் ஆகியவற்றை நீண்ட காலத்திற்கு தள்ளி வைக்க முடியாது என்று இந்தியா நம்புகிறது.

ஐநா அமைப்பு குறிப்பாக பாதுகாப்பு கவுன்சில், 21ம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் அழுத்தத்தின் சுமையை தாங்க முடியாமல் நொறுங்குவதை காண்கிறோம். ஆகவே, உலகளாவிய கொள்கை வகுப்பதிலும், நாடு கடந்த பிரச்னைகளை தீர்ப்பதில் பலதரப்பு அணுகுமுறையை வகுப்பதிலும் ஐநா மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதிலும் பொதுச் சபை முன்னிலை வகிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கிடையே, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல், ஹமாஸ் போர் விவகாரம் தொடர்பாக 5வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. காசா முழுவதும் உடனடியாக தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டுமென மால்டா நாடு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் தற்போது வெற்றிபெற்றுள்ளது. நான்கு முறைக்குமேல் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து இந்த முறை தான் நாடுகளின் பெரும்பான்மை ஒப்புதலின்பேரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.