துபாய்க்கு தப்ப முயன்ற பசில் ராஜபக்ச...கொந்தளித்த மக்கள்: எதிர்ப்பு தெரிவித்த விமானநிலைய அதிகாரிகள்!

துபாய்க்கு தப்ப முயன்ற பசில் ராஜபக்ச...கொந்தளித்த மக்கள்: எதிர்ப்பு தெரிவித்த விமானநிலைய அதிகாரிகள்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் சகோதரரும் , முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச, கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விஐபி டெர்மினல் வழியாக துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் விமான நிலைய அதிகாரிகள் அவரது பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியளிக்காத காரணத்தால் பசில் ராஜபக்சவால் வெளியேற முடியவில்லை.

பசில் ராஜபக்ச நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு செக்-இன் கவுண்டரை அடைந்ததாகவும், விமான நிலைய அதிகாரிகள் அவரை அனுப்ப மறுத்ததால் அதிகாலை 3.15 மணி வரை அங்கு காத்திருந்ததாகவும், மக்கள் அவரை அடையாளம் கண்டு அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து துபாய்க்கு தப்பி செல்ல முடியாமல் விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்.

அதேவேளையில், பசில் ராஜபக்சவுக்கு அடைக்கலம் தருவதாக வெளியான தகவலை இந்திய அரசாங்க வட்டாரங்கள் மறுத்துள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டம் காரணமாக நாளை ராஜினாமா செய்யவிருக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக வெளியான தகவல்களையும் இந்திய தரப்பு மறுத்துள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக நிலவும் பொருளாதார நெருக்கடியால் கோபமடைந்த மக்கள் கடந்த சனிக்கிழமையன்று அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு கைப்பற்றினார்கள். இதனைத் தொடர்ந்து அதிபர் மாளிகையிலிருந்து கோத்தபய ராஜபக்ச தப்பியோடினார். அவரும் நாட்டைவிட்டு விமானம் மூலம் தப்பிசெல்ல முயன்றபோது அதிகாரிகள் தடுத்த காரணத்தால் வெளியேற முடியாமல் ராணுவ அலுவலகத்தில் தஞ்சமடைந்ததாகக் கூறப்படுகிறது. பதவியிலிருந்து விலகியபின்னர் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல ராஜபக்ச சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் முயன்று வருகின்றனர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in