
உக்ரைன் தரப்பு பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கையை செயல்படுத்துகிறது. இந்த சூழலில் எங்களால் போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாது என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவின் மீது உக்ரைன் இன்று அதிகாலை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
அப்போது ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியதுடன், 2 ட்ரோன்கள் மின்னனு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டன என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் அமைதி திரும்ப ஆப்ரிக்க நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த அமைதி திட்டம் குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆப்ரிக்க தலைவர்கள், ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்பின்னர் ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆப்ரிக்க முன்முயற்சி உக்ரைனில் அமைதிக்கு ஒரு அடிப்படையாக இருக்கலாம், ஆனால், உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அந்த அமைதி முயற்சியைச் செயல்படுத்துவது கடினம். அமைதி முயற்சியில் செயல்படுத்த கடினமாக அல்லது சாத்தியமற்ற விஷயங்கள் உள்ளன.
உக்ரைன் தரப்பு பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கையை செயல்படுத்துகிறது. இந்த சூழலில் எங்களால் போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாது' என்று தெரிவித்துள்ளார்.