பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கும், தனக்கும் எந்த முரணும் இல்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கே கூறியுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநருக்கும், பிரதமருக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக சமூக ஊடங்களில் செய்தி வெளியானது. இதே கருத்தை கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில்," புதிய நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்கேவின் முதல் பலி தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கே தான். மத்திய வங்கியின் ஆளுநருக்கும், ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையில் ஏராளமான முரண்பாடுகள் காணப்படுவது எனக்குத் தெரியும்" என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கே, பிரதமருடன் தமக்கு முரண்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார். இத்தகைய தகவல்களை கடுமையாக நிராகரிப்பதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் தொடர்ந்து செயல்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.