
மியாமியிலிருந்து சிலி நோக்கி பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று, விமானிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பெரும் தத்தளிப்புக்கு ஆளானது.
மியாமியிலிருந்து 271 பயணிகளுடன் கிளம்பிய விமானத்தின் பைலட் அடுத்த 40 நிமிடங்களில் மாரடைப்பினை எதிர்கொண்டார். லாதம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த போயிங் ரக விமானத்தில், பிரதான பைலட் தவிர்த்து துணை விமானிகள் இருவர் இருந்தனர். எனினும், ஆகாயத்தில் எழுந்த எமர்ஜென்சியை முறையாக எதிர்கொள்ள வழியின்றி அவர்கள் தத்தளித்தனர்.
பயணிகளில் எவரேனும் மருத்துவர் அல்லது செவிலியர் இருக்கிறார்களா என்ற அவசர உதவியை, அந்த விமானத்தின் பயணிகள் மத்தியில் துணை விமானிகள் கோரினர். விமானத்தின் பைலட் மாரடைப்புக்கு ஆளாகி இருப்பதாக வெளியான தகவலால், பயணிகள் மத்தியிலும் சலசலப்பு எழுந்தது.
விமான பயணிகள் மத்தியிலிருந்து உதவிக் கரம் நீட்டிய செவிலியர் ஒருவர், உடனடியாக இவான் ஆண்டார் எனும் 56 வயது பைலட்டை மருத்துவமனையில் அனுமதிப்பது அவசியம் என வலியுறுத்தினார். இதனையடுத்து பனாமா நகரின் டோகுமென் சர்வதேச விமான நிலையத்தில் உரிய அனுமதி பெற்று லாதம் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறங்கியது.
தரையிறங்கிய சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி விமானி இவான் ஆண்டார் மரணமடைந்தார். விமானத்தை செலுத்தும் போது நடுவானில் தலைமை பைலட்டுக்கு திடீர் மாரடைப்பு நேரிட்ட போதும், துணை விமானிகள் சமயோசிதமாய் செயல்பட்டு 271 பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி இடை நகர் ஒன்றில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியது பாராட்டு பெற்றிருக்கிறது.