அடுத்தடுத்து சர்ச்சை... பொருளாதார சரிவு... நள்ளிரவில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு!

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தானில் தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலில், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் கடந்த 2018 ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. பாகிஸ்தானில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் செயல்பட்டார்.

இதற்கிடையே தான் அவருக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றனர். இதனால் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். இதையடுத்து இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இம்ரான் கான்
இம்ரான் கான்

நில முறைகேடு, கருவூல மோசடி தொடர்பான விசாரணைகள் தீவிரமாகின. இந்நிலையில் தான் கருவூல மோசடி வழக்கில் இம்ரான் கானுக்கு சில நாட்களுக்கு முன்பு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையால் இம்ரான் கான் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், முன்கூட்டியே நேற்று நள்ளிரவில் கலைக்கப்பட்டது.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார். மேலும், தேர்தல் நடத்தி முடிக்க 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ள அதிபர், அதுவரை காபந்து அரசை வழிநடத்த பிரதமரை தேர்வு செய்ய 3 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார்.

ஆனால், தற்போதைய சூழலில் காபந்து அரசு தேர்தலை ஓராண்டு காலம் வரை தள்ளிப் போடலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. தொடரும் அரசியஸ் ஸ்திரத்தன்மையற்ற சூழலில் தேர்தலை நடத்துவதை விட, காபந்து அரசாக செயல்பட்டு, நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் சீரமைப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் நிலவி வரும் சூழலை கண்காணித்து வரும் அமெரிக்கா, தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in