எல்லை தாண்டிய காதல்; பாகிஸ்தான் காதலியின் கரம் பிடித்து அழைத்து வந்த இந்திய காதலன்!

பாகிஸ்தானின் ஜவாரியாவை கரம் பிடிக்கும் இந்தியாவின் சமீர் கான்
பாகிஸ்தானின் ஜவாரியாவை கரம் பிடிக்கும் இந்தியாவின் சமீர் கான்

பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக விசா பெற்று இந்தியா வந்ததை காதலன் வீட்டார் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த சமீர் கான் என்பவர் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பணி நிமித்தமாக தங்கியிருந்தார். அப்போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜவாரியா கன்னம் என்பவரை காதலித்து வந்துள்ளனர். இருவரும் இசுலாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என்ற போதும், வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு தற்காலிகமாக முட்டுக்கட்டை நிலவியது.

வாகா எல்லைக்கு வந்த ஜவாரியாவுக்கு சமீர் வீட்டார் உற்சாக வரவேற்பு
வாகா எல்லைக்கு வந்த ஜவாரியாவுக்கு சமீர் வீட்டார் உற்சாக வரவேற்பு

இதையடுத்து இரு வீட்டாரும், ஆன்லைன் மூலம் பேசியதில், திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இருப்பினும் ஜவாரியா, இந்தியா வருவதற்கு விசா எடுப்பதில் சிக்கல் நிலவியது. இந்நிலையில் இருவருக்கும் ஆன்லைன் முறையிலேயே நிச்சயாதார்த்தமும் நடைபெற்றது. இதனிடையே ஒரு வழியாக விசா கிடைத்ததால், அவர் அத்தாரி-வாகா எல்லை வழியாக இந்தியா வர முடிவானது.

45 நாட்கள் விசாவில் ஜவாரியா இந்தியா வந்துள்ளார்
45 நாட்கள் விசாவில் ஜவாரியா இந்தியா வந்துள்ளார்

இதையடுத்து இன்று வாகா எல்லைக்கு தந்தையுடன் வந்த ஜவாரியாவை, காதலன் சமீர் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் கரம் பிடித்து உற்சாகமாக வரவேற்றனர். இதையடுத்து அவர்கள் விமானம் மூலம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்றனர். அங்கு இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. தற்போது 45 நாட்கள் விசாவில் இந்தியா வந்துள்ள ஜவாரியா திருமணத்திற்கு பிறகு விசாவை நீட்டிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in