
இஸ்ரேலுடனான போரை நாங்கள் விரும்பவில்லை என அதன் அண்டை தேசமான லெபனான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் 18வது நாளை எட்டி இருக்கிறது. காசாவை குறிவைத்து இஸ்ரேலிய வான்படைகள் குண்டு மழை பொழிந்த பிறகும், அதன் பழிவாங்கல் நின்றபாடில்லை. அக்.7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலுக்கு, இஸ்ரேல் திடமாகவும், நிதானமாகவும் பதிலடி தந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் காசா பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதாக கூறி குடியிருப்புகளில் தொடர் தாக்குதல் நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். குறிப்பாக அங்கு பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கையும், பரிதாபமும் உலகை உலுக்கி வருகின்றன. காசா மீதான தாக்குதலில் வேகம் காட்டிய இஸ்ரேல் அடுத்தபடியாக லெபனான் பக்கம் திரும்பியிருக்கிறது.
அக்.7 இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல், லெபனானில் இருக்கும் ஹிஸ்பொல்லா தீவிரவாத அமைப்புகளின் நிலைகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் கண்டறிந்தது. அப்போதே லெபானானின் ஹிஸ்பொல்லா நிலைகளை குறிவைத்து பீரங்கி தாக்குதல் நடத்தியபோதும், விரைவில் முழுவீச்சிலான தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேல் தயாராகி வருகிறது. இது மத்திய கிழக்கில் மேலும் போர்ப்பதட்டத்தை அதிகரித்துள்ளது. ஹிஸ்பொல்லா - இஸ்ரேல் இடையிலான மோதல் தீவிரமடைவது, இரண்டாவது லெபனான் போருக்கு வழி செய்யும் என இஸ்ரேல் பிரதமர் ஏற்கனவே எச்சரிந்தார்.
அதனை மேற்கோள்காட்டிய ஜியோத் மகாரி என்னும் லெபனான் அமைச்சர், “இஸ்ரேலுடன் நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் இஸ்ரேல் அரசியல் தலைவர்கள் முதல் ராணுவத் தளபதிகள் வரை லெபனான் மீது தாக்குதல் தொடுக்கப்போவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் ஆதாயத்திற்காகவும் லெபனான் மீதான போரினை விரும்புகிறார்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.