இஸ்ரேல் போரில் அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள் - முதன்முறையாக பிரதமர் மோடி கண்டனம்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகளாவிய தெற்குலக நாடுகளின் இரண்டாவது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. காணொலிக் காட்சி மூலம் 10 அமர்வுகள் நடக்கும் இந்த மாநாட்டில் சுமார் 150 நாடுகளின் தலைவர்கள், வெளியுறவு அமைச்சர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு தெற்குலக நாடுகளிடையே ஒத்துழைப்பு, வர்த்தகம் தொடர்பாக பேசுகின்றனர். இந்த மாநாட்டை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார்.

அல் அஹ்லி மருத்துவமனை தாக்குதலில் காயமடைந்து, அல் ஷிஃபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள்
அல் அஹ்லி மருத்துவமனை தாக்குதலில் காயமடைந்து, அல் ஷிஃபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள்

அப்போது அவர் பேசியதாவது: கடந்த ஜனவரியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் வளர்ந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தவகையில் தெற்குலக உச்சி மாநாட்டின் குரல் உலகில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியாவில் நடைபெறும் சம்பவங்களில் இருந்து புதிய சவால்கள் உருவாகி வருகின்றன. உலகளாவிய நன்மைக்காக தெற்கு நாடுகள் ஒற்றுமையுடன் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்து போய் உள்ள காசா
இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்து போய் உள்ள காசா

அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தது. நாங்கள் இந்த விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்திருக்கிறோம். போர் குறித்த பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெறும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசிய பிறகு இந்தியாவில் இருந்து பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறோம்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in