
நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் நேபாளத்திற்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் வடமேற்குப்பகுதியில் நேற்று இரவு 11.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இதன் காரணமாக வீடுகள் சீட்டுக் கட்டுப்போல சரிந்து விழுந்துள்ளன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர்.
நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை காலை 7 மணி நிலவரப்படி 72ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வேதனை தெரிவித்துள்ளார். அதில், ‘’நேபாள நிலநடுக்கத்தால் ஏற்பட்டால் இழப்புகளை அறிந்து மிகுந்த வேதனடைந்தேன். இந்த நேரத்தில் நேபாளத்துடன் இந்தியா துணை நிற்கிறது. அந்நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.