நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விண்ணப்பித்ததால், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷ்யா. 79-வது நாளாகத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்திவருகின்றன ரஷ்யப் படைகள்.
உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளில் பயின்றுவந்த இந்திய மாணவர்கள், போர்ச் சூழலுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க ஆபரேஷன் கங்கா எனும் பெயரில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்ட மீட்புப் பணியில், 16,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டனர். அந்தப் பணிகளில் உக்ரைன் தலைநகர் கீவில் இயங்கிவந்த இந்தியத் தூதரகம் முக்கியப் பங்காற்றியது. தாக்குதல் அதிகரித்ததால் கீவில் இருந்த தூதரக அலுவலகம் மூடப்பட்டது. உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் தற்காலிகமாக இந்தியத் தூதரக அலுவலகம் செயல்பட்டுவந்தது.
இந்நிலையில், கீவில் மீண்டும் இந்தியத் தூதரகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே 17-ல் தூதரகம் திறக்கப்படுகிறது.