குடும்பத்துடன் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வந்தாரா?

இலங்கைக்கான இந்தியத் தூதரகம் மறுப்பு
குடும்பத்துடன் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வந்தாரா?

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்குத் தப்பி வந்திருப்பதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்திருக்கிறது.

இலங்கையில் திங்கள்கிழமை (மே 9) நிகழ்ந்த கடும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகு மகிந்த பதவி விலகுவதாக அறிவித்தார். பின்னர் தனது அதிகாரபூர்வ இல்லமான டெம்பிள் ட்ரீஸ் கட்டிடத்திலிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் அவரும் அவரது குடும்பத்தினரும் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், உறுதிப்படுத்தப்படாத பல ஊகங்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.

மகிந்தவின் பூர்விக இல்லம் உட்பட அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.பி-க்களின் வீடுகள், அவர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாகவும், 250 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடும் நெருக்கடி, வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அந்நாட்டின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மையைக் காக்கவும் பொருளாதார மீட்சிக்கு உதவவும் முழு ஆதரவையும் வழங்குவதாக இந்தியா தெரிவித்திருந்தது.

இந்தச் சூழலில் விமானம் மூலம் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் சட்டவிரோதமாகத் தப்பியதாகவும் அதற்கு இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறை பொது இயக்குநர் கேப்டன் தெமியா அபேவிக்ரமா உதவியதாகவும் தகவல்கள் பரவின. இதை அவர் மறுத்திருக்கிறார். இதற்கிடையே, ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் திரிகோணமலை கடற்படைத் தளத்தில் தஞ்சமடைந்ததாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் அங்கு திரண்டனர்.

வன்முறையையும் பழிவாங்கும் செயல்களையும் நிறுத்துமாறு அதிபர் கோத்தபய ராஜபக்ச போராட்டக்காரர்களுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பதற்றமான இந்தச் சூழலுக்கு நடுவில், மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்துடன் இந்தியாவுக்குத் தப்பி வந்ததாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்களும் இந்தச் செய்தியை வெளியிட்டன.

இந்நிலையில், இந்தத் தகவலை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்திருக்கிறது. ‘குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்தியாவுக்குத் தப்பிச்சென்றதாக சில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவிவருவது எங்கள் கவனத்துக்கு வந்திருக்கிறது. இவை தவறானவை; அப்பட்டமான பொய்த் தகவல்கள். இதை இந்தியத் தூதகரம் உறுதியாக மறுக்கிறது’ என்று இந்தியத் தூதரகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

வெளியேற மாட்டோம்

இதற்கிடையே, மகிந்தவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபக்ச, “நாங்கள் இலங்கையிலிருந்து வெளியேறவிருப்பதாக ஏராளமான வதந்திகள் பரவுகின்றன. நாங்கள் நாட்டை வெளியேற மாட்டோம்” என்று கூறியிருக்கிறார். இதுவரை மகிந்த எங்கு இருக்கிறார் எனும் அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகாத நிலையில், ”எனது தந்தை பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக இருக்கிறார். குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறார்” என்று நமல் தெரிவித்திருக்கிறார்.

போராடுவதற்கு இலங்கை மக்களுக்கு உரிமை இருக்கிறது என்று தனது குடும்பம் கருதுவதாக் கூறியிருக்கும் நமல், “மக்கள் பக்கமே எப்போதும் நிற்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in