சீனாவில் பரவும் புதிய வகை நோய்...தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு திடீர் எச்சரிக்கை!

சீனா மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம்.
சீனா மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம்.
Updated on
2 min read

சீனாவில் குழந்தைகளிடையே பரவும் சுவாச நோய் தொற்று தீவிரம் அடைந்து வருவதால், இந்தியாவில் தமிழ்நாடு உட்பட   6 மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. 

சீனாவில் கடந்த சில மாதங்களாக குழந்தைகளுக்கு புது வகையான காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை காய்ச்சல் என்பது சுவாச நோய் தொற்று என கூறப்பட்டது. இதனால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து இந்தப் புதிய நோய் பாதிப்புகள் குறித்து சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்டது. 

இதற்கு விளக்கமளித்த சீன சுகாதாரத்துறை அமைப்பு, சுவாச நோய்த்தொற்று அதிகரிப்புக்கும், காய்ச்சலுக்கும் தொடா்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், தற்போது அதிகமாக பரவி வரும் சுவாச நோய் என்பது பருவகால சுவாச நோய் என்றும் இது வழக்கமான எண்ணிக்கையை விட சற்று அதிகம் எனவும் கூறியதாக தகவல் வெளியானது.

மருத்துவமனையில் சிகிச்சை
மருத்துவமனையில் சிகிச்சை

அதனையடுத்து புதியதாக எந்த வைரஸ் தொற்றும் ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்தது. இந்த சூழலில், சீனாவில் ஏற்பட்டுள்ள சுவாசநோய் தொற்று மீது இந்தியா கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சீனாவில் குழந்தைகளிடையே பரவும் சுவாச நோய் தொற்று அதிகரித்து வருவதால், இந்தியாவில் ராஜஸ்தான், கர்நாடகா,  குஜராத், உத்தராகண்ட், ஹரியாணா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுவாசக் கோளாறுகள் என வரும் நோயாளிகளைச் சமாளிக்கத் தயாராக இருக்குமாறு மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலைமை தற்போது கவலைக்கிடமாக இல்லை. ஆனால், மருத்துவ ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். குழந்தைகள் பிரிவுகள் மற்றும் மருத்துவப் பிரிவுகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உத்தராகண்டின் சாமோலி, உத்தர்காஷி மற்றும் பித்தோராகர் ஆகிய மூன்று மாவட்டங்கள் சீனாவுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்வதால் சுவாச நோய்களுக்கான கண்காணிப்பை அதிகரிக்க அம்மாநில அரசு, சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்று, தமிழகமும் தயார் நிலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தில் குழந்தை நிமோனியா  எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மேலும், சீனாவின் தற்போதைய இன்புளுயன்சா சூழ்நிலையிலிருந்து வெளிப்படும் எந்தவொரு அவசர நிலைக்கும் இந்தியா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டில் உள்ள குழந்தைகளில் H9N2 மற்றும் சுவாச நோய்த்தொற்று பாதிப்புகள் குறித்து கண்காணித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in