
தாங்கள் பிடித்து வைத்திருக்கும் அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிப்பதாக அறிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, அதற்காக ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளது.
கடந்த அக்.7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படை யாருமே எதிர்பார்க்காத வகையில் தாக்குதலை நடத்தியது மிகக் குறுகிய நேரத்தில் அதிகப்படியான ஏவுகணைகளை வீசினர். மேலும் பாராசூட், ஜீப் மூலமாகவும் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதலை நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டிற்குள் வந்த ஹமாஸ் படை பலரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. காஸா பகுதியை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஒரு வாரத்திற்கு மேலாக இப்படி இரு தரப்பு மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், எங்கு இந்த போர் அங்குப் பிராந்தியம் முழுக்க பரவுமோ என்றும் அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே யுத்தம் இன்று 12 வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. காஸா பகுதியில் உள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் ஹமாஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹமாஸ் படையிடம் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தாங்கள் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க ரெடியாக உள்ளதாக ஹமாஸ் படை அறிவித்துள்ளது. இருப்பினும், அதற்கு ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
அதாவது காஸா மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசுவதை நிறுத்தினால் பிணைக் கைதிகளாக உள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸா பகுதியில் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்தினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ரெடியாக உள்ளதாக ஹமாஸ் படை அறிவித்துள்ளது.
காஸா நகர மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் பல நூறு பேர் உயிரிழந்த நிலையில், இப்போது பிணைக் கைதிகளை விடுவிக்க ரெடியாக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.