புலம்பெயர் தமிழர்களிடம் உதவி கோரும் கோத்தபய!

நெருக்கடி காலத்தில் கைகொடுக்க தமிழர்களுக்கு அழைப்பு
கோத்தபய ராஜபக்ச.
கோத்தபய ராஜபக்ச.

இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, இலங்கையிலிருந்து வெளியாகும் ‘தமிழன்’ இதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யலாம். கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ எதுவும் இருந்து வராமல் போயிருந்தால், அவர்களை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்யும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

“புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேஷ நிதியமொன்று உருவாக்கப்படுதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனையை முன்வைத்துள்ளது. இதைப் பற்றி தொடர்ந்து பேசி தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் எமது நாட்டில் பிறந்தவர்களே. இந்த நாட்டில் எதனையும் மேற்கொள்ள அவர்களுக்கு உரிமையுண்டு. அவர்கள் இங்கு வருவதற்கோ அல்லது இங்கு வந்து முதலீடுகளைச் செய்வதற்கோ அச்சப்படத் தேவையில்லை. அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்யும். இதில் பிரச்சினைகள் இருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் அவர்கள் கூறலாம். அவற்றைக் கவனிக்க அரசு தயாராக இருக்கிறது" என்று அந்தப் பேட்டியில் கோத்தபய ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in