சிங்கப்பூரின் முன்னாள் நிதி அமைச்சர் ரிச்சர்ட் ஹூவு நேற்று முன்தினம் காலமானார். தனது வாழ்நாள் முழுவதும் தேசத்திற்கான அவருடைய பங்களிப்பு மற்றும் சேவைக்கு நமது நாடு நன்றிக் கடன்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சுமார் 16 ஆண்டுகள் சிங்கப்பூரின் நிதியமைச்சராக அவர் பணியேற்றியுள்ள நிலையில், சிங்கப்பூர் நாட்டில் மிக நீண்ட காலம் நிதியமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிச்சர்ட் ஹு. செப்டம்பர் 8ம் தேதி தனது 96வது வயதில் ரிச்சர்ட் ஹு காலமானார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் ஹூவை தனது நெருங்கிய நண்பர் என்று விவரித்த லீ , தாங்கள் இருவரும் கடந்த 1984ம் ஆண்டு தான் அரசியலில் நுழைந்து, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றியதாக அவர் தனது பதிவில் பெருமையோடு கூறியுள்ளார்.
''அவரது புத்திசாலித்தனமான அறிவுரை, வலுவான உணர்வு மற்றும் சிங்கப்பூரர்கள் மீதான ஆழ்ந்த அக்கறை ஆகியவற்றை நான் எப்போதும் அன்புடன் நினைவில் கொள்வேன்" என்றும் பிரதமர் லீ கூறினார். GIC இல் - ஹு ஒரு குழு உறுப்பினராகவும், தலைவராகவும் பணியாற்றியபோது, சிங்கப்பூர் பிராந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் வளர்ச்சியை அவர் அப்போதே கணித்தவர் என்றார்.
மேலும் கடந்த 1994 ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ஹூ, சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தினார் என்றும் PM லீ குறிப்பிட்டார். "இது எங்கள் சர்வதேச போட்டித்தன்மைக்கு சவால் விடும் வகையில், பல நாடுகளும் இதையே செய்து கொண்டிருந்த நேரத்தில், வருமானம் மற்றும் பெருநிறுவன வரிகளை குறைக்க எங்களுக்கு உதவியது" என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.