“இலங்கையில் மோசமான காலகட்டம் இன்னும் வரவில்லை. இனி வரவிருக்கும் மோசமான காலங்களுக்கு மக்கள் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள்” என அந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்கே, “பல்வேறு நாடுகளின் உதவிகள் காரணமாக செப்டம்பர் வரை நம் நாட்டில் உணவு விநியோகம் ஓரளவு செய்ய முடியும். அதற்குப் பிறகு கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது, அப்போது மக்களுக்கு இரண்டு வேளை உணவுகூட கிடைக்காது. உணவு நெருக்கடி முற்றினால் மக்களுக்கு ஒரு வேளை உணவு கிடைப்பதே சிரமமாகிவிடும். வரவிருக்கும் உணவு நெருக்கடியைச் சமாளிக்க உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.
மேலும், “அடுத்த பயிர் சாகுபடி பருவத்திற்குத் தேவையான உரங்களை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் வெற்றியடையும் பட்சத்தில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்குள் நாடு உணவுத் தேவையில் தன்னிறைவு அடையும்" என ரணில் தெரிவித்தார்.