சீனாவிலும், மியான்மரிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனாவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.1 என்ற ரிக்டர் அளவிலும், அடுத்து 3 நிமிடங்களுக்கு பிறகு 4.5 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு தெருவிற்கு ஓடி வந்தனர். இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதேபோல் மியான்மர் அருகே யாங்கோனில் மிதமான நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோல் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.