சாஜித் மீரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முட்டுக்கட்டை போட்ட சீனா!

மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு பகிரங்க ஆதரவு
சாஜித் மீரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முட்டுக்கட்டை போட்ட சீனா!

இந்தியாவால் தேடப்படும் மிக முக்கிய பயங்கரவாதியும், 26/11 மும்பைத் தாக்குதலில் தொடர்புடையவருமான சாஜித் மீரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.

2008 செப்டம்பர் 11-ல் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் சாஜித் மீர். பாகிஸ்தானைச் சேர்ந்த இவர், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர். மும்பை தாக்குதலுக்குத் திட்டமிட்டது, ஏற்பாடுகளைச் செய்தது, செயல்படுத்தியது என மூன்றிலும் அவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவால் தேடப்படும் மிக முக்கியமான பயங்கரவாதிகளில் ஒருவரான அவரின் தலைக்கு 5 பில்லியன் டாலரை விலையாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல்-கொய்தா தடை கமிட்டியின் பட்டியலின்கீழ் அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கவும், அவரது சொத்துக்களை முடக்கி, பயணத் தடை விதித்து, ஆயுதத் தடை விதிக்கவும் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை, செப்டம்பர் 15-ம் தேதி சீனா முறியடித்துவிட்டது. அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா மேற்கொண்ட இந்த முயற்சி சீனாவின் குறுக்கீட்டால் தடைபட்டுவிட்டது.

அவரைத் தேடிவந்த மேற்கத்திய நாடுகளிடம் அவர் இறந்துவிட்டதாக ஆரம்பத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் பொய் கூறினர். எனினும், அவர் இறந்ததற்கான ஆதாரத்தை வழங்குமாறு மேற்கத்திய நாடுகள் கேட்டன. இந்தச் சூழலில், பயங்கரவாதச் செயலுக்கு நிதி அளித்தது தொடர்பான வழக்கில் பாகிஸ்தானின் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இவ்விவகாரத்தால் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்.ஏ.டி.எஃப்) சாம்பல் பட்டியலில் (grey list) பாகிஸ்தான் நீடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சாஜித் மீர் விவகாரத்தில் மட்டுமல்ல, பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாதிகளை, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கறுப்புப் பட்டியலில் சேர்க்க அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முயற்சிக்கும்போதெல்லாம் அதற்கு முட்டுக்கட்டை போடுவதில் சீனா மும்முரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in