இலங்கையில் ஆட்சி மாறினாலும் பொருளாதார சீரழிவினால் ஏற்பட்ட அவலங்கள் மாறவில்லை என அங்கிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த தமிழர்கள் குமுறலுடன் கூறினர்.
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக கடும் பொருளாதார நிலக்கடி நிலவுகிறது. பொருளாதாரச் சீரழிவால் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் பலமடங்கு விலை உயர்ந்தது. இதனை சமாளிக்க முடியாத இலங்கை மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த நாட்டை விட்டு வெளியேறிய கோத்தபயவிற்குப் பதிலாக ரணில் விக்கிரம சிங்கே அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆனாலும், பொருளாதார சிக்கலுக்கு இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. இதனால் பலரும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளைத்தேடி செல்கின்றனர்.
இந்நிலையில் இலங்கை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் உள்ள ஒன்றாம் மணல் திட்டில் இன்று வந்திறங்கினர். ஒரு வயது கைக்குழந்தை உள்ளிட்ட நான்கு குழந்தைகள், 2 ஆண்கள், 4 பெண்கள் என அகதிகளாக வந்த 10 பேரையும் மீட்டு வந்த தமிழக கடலோர காவல் குழும போலீஸார் விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அகதிகளாக வந்த தமிழர்கள் கூறுகையில், ‘’இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் பொருளாதார நிலையில் பெரிதான மாற்றங்கள் ஏதும் நடக்கவில்லை. இது தவிர தமிழர்களின் பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றுவதையும் இலங்கை அரசு நிறுத்தவில்லை. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு இடையே அங்கே வாழ முடியாமல் உயிரைப் பணயம் வைத்து இங்கு அடைக்கலம் தேடி வந்தோம்’’ என்றனர்.