அமெரிக்காவிலிருந்து மீண்டும் இலங்கைக்கு திரும்பினார் பசில் ராஜபக்ச: புதிய திட்டம் என்ன?
இலங்கையின் முன்னாள் நிதியமைச்சரான பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் நிதியமைச்சரும், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் பொது அமைப்பாளரும், முன்னாள் அதிபர்கள் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இனி தேர்தலை எதிர்கொள்ளும் திட்டங்களையும், கட்சி சீரமைப்பு பணிகளையும் பசில் ராஜபக்ச மேற்கொள்வார் என சொல்லப்படுகிறது.
இலங்கை நாடு சந்தித்து வரும் கடும் பொருளாதார சீரழிவுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பசில் ராஜபக்சவும் ஒருவராக இணைக்கப்பட்டார். அவர் தரப்பில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், ஜனவரி 15ம் தேதி வரை வெளிநாடு செல்ல அவருக்கு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 9ம் தேதி அமெரிக்கா சென்றார். இலங்கையில் தற்போது முந்தைய ஆட்ட்சிக்கு எதிரான போராட்டங்கள் குறைந்துள்ளதால் பசில் ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பியுள்ளார். முன்னதாக இலங்கை மக்களின் கடும் போராட்டம் காரணமாக வெடித்த கிளர்ச்சியால் நாட்டிலிருந்து தப்பியோடிய அதிபர் கோத்தபய ராஜபக்சவும், மாலத்தீவு, சிங்கப்பூர், தாயாந்து ஆகிய நாடுகளில் தங்கியிருந்து, அதன்பின்னர் நாடு திரும்பினார்.