
கொரோனாவை விட ஆபத்தான தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் பேசினார். அப்போது, “கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் இரண்டு கோடி பேர் இறந்துள்ளனர். இனி, கோவிட் பெருந்தொற்று உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்காது. ஆனாலும, அந்தப் பெருந்தொற்று முற்றிலுமாக மறைந்துவிடவில்லை. தொலைவில் இருக்கிறது.
கோவிட் தொற்று நோயை விட, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மிகவும் ஆபத்தான தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. அந்தத் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்தப் புதிய பெருந்தொற்று கோவிட் பெருந்தொற்றைவிட அதிக உடல் பாதிப்புகளையும், உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தக்கூடியது என்பதால், அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்.
கோவிட் தொற்று நோய் வந்தபோது அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக இல்லை. அதன் காரணமாக அது மிகப்பெரிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. புதிதாக வரவுள்ள தொற்று நோயும் வீழ்த்தக் கூடியதாக இருக்காது. அது நமது கதவைத் தட்டப் போகிறது. நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்யாவிட்டால் அது நிச்சயம் நடக்கும். இப்போதே நாம் செய்யாவிட்டால், பிறகு எப்போது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.