
வங்கதேசத் தலைநகர் டாக்காவிலுள்ள 7 மாடிக் கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பழைய டாக்கா நகரில் உள்ள குலிஸ்தான் பகுதியில் 7 மாடிக் கட்டிடம் உள்ளது. சந்தைக்குச் செல்லும் பரபரப்பான சாலையில் இந்த கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் வங்கி அலுவலகம், கடைகள், அலுவலகங்கள் இயங்கிவந்தன. மேலும் தரைத்தளத்தில் வேதியியல் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மாலை இந்தக் கட்டிடப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அந்தப் பகுதியில் ஏதோ குண்டுவெடித்தது என்று மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடிவிபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
வெடிவிபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும், அந்தக் கட்டிடத்தின் தரைப்பகுதியில் சட்டவிரோதமாக வேதியியல் பொருட்களைச் சேகரித்து வைத்து இருந்தார்கள் என்றும், அதுவே வெடிவிபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இன்று காலை நிலவரப்படி இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாகவும், 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தீயணைப்பு அதிகாரி டினோமோனி தெரிவித்தார். தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நடந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.