மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை ஊழியர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த நேரடி ஒத்திகையின்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களில் பயணம் செய்த கடற்படை ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மலேசிய கடற்படை தினத்தின் 90-ம் ஆண்டு நிகழ்ச்சிக்காக இன்று நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நடந்துள்ளது.
இன்று காலை 9.32 மணியளவில் நடந்த ஒத்திகையின் போது ஆர்எம்என் கடல்சார் ஆபரேஷன் ஹெலிகாப்டர் மற்றும் ஆர்எம்என் ஃபெனெக் ஹெலிகாப்டர் மோதிக்கொண்டதாக ராயல் மலேசியன் நேவி உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஒத்திகையில் 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் அடையாளம் காணும் செயல்முறைக்காக உடல்கள் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்குழுவை நிறுவவும், இதற்கான விசாரணை செயல்முறையைப் பாதுகாக்கவும் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான வீடியோவை யாரும் ஒளிபரப்ப வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.