அமெரிக்காவில் தாய் ஒருவர் கவனக்குறைவாக குழந்தையை தொட்டிலில் வைப்பதற்கு பதிலாக ஓவனில் வைத்ததில், குழந்தை தீக்காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தி நம் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு பதிலாக சமீப காலமாக மக்கள் அதற்கு அடிமையாகி , சோம்பலாகி வருகின்றனர். ஒவ்வொருவரின் ஆறாம் விரலாய் செல்போன் இடம்பிடித்திருக்கும் நிலையில், உறவுகளை இழந்து வருகிறோம். அந்த வகையில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தின் கன்சாஸ் நகரில், தனது ஒரு மாத கைக்குழந்தை உயிரிழந்து விட்டதாக அதன் தாய் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், குழந்தையின் உடலை பரிசோதனை செய்த போது உடலில் தீக்காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக குழந்தையின் தாய் மரியா தாமஸிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தையை தவறுதலாக தொட்டிலுக்கு பதிலாக மைக்ரோவேவ் ஓவன் எனப்படும் அடுப்பில் வைத்ததாக கூறி மரியா தாமஸ் அதிர்ச்சியளித்தார்.
கடும் சூடு காரணமாக குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டதோடு உயிரிழந்து விட்டதாகவும் அவர் தெரிவித்ததால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மரியா தாமஸ் மீது உயிரிழப்பு ஏற்படும் வகையில் அஜாக்கிரதையாக இருந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள போலீஸார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜாக்சன் கவுண்டி வழக்கறிஞர் ஜீன் பீட்டர்ஸ், ”குழந்தையின் உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குற்றம் சாட்டப்பட்டுள்ள மரியா தாமஸுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். பெற்ற தாயின் கவனக் குறைவால், குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம், அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.