நாம் ஏற்கெனவே சொன்னது போலவே, மாரிசெல்வராஜின் 'மாமன்னன்' படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லப்போவதாக வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார் உதயநிதி. அதன் பிறகு தீவிர அரசியல் தான் என்கிறார்கள். அப்பாவைப் போல அவரும் தொடக்கத்தில் உள்ளாட்சித் துறைக்கு அமைச்சராகலாம் என பலரும் சொல்லி வரும் நிலையில், உதயாவுக்கு தொழில்துறை மீது கண் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒருவேளை, அவரது ஆசைப்படியே தொழில்துறைக்கு அவர் அமைச்சராக்கப்பட்டால் மெய்யநாதனின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்படலாம் என்கிறார்கள். அதேபோல், உள்ளாட்சித் துறையை இரண்டாகப் பிரித்து வைத்திருப்பதில் சில பல சங்கடங்கள் வந்து போவதால், கே.ஆர்.பெரியகருப்பனிடம் இருக்கும் ஊரக வளர்ச்சித் துறையையும் கே.என்.நேருவிடமே கொடுத்துவிடலாமா என்ற யோசனையும் தலைமை வட்டாரத்தில் ஓடுகிறதாம்.