திமுகவினரின் திடீர் ‘முருக வழிபாடு!’
பாஜகவுக்கு இணக்கமாக இருப்பதாகச் சொல்லப்படும் கூற்றை திமுக தரப்பில் என்னதான் மறுத்தாலும் எதார்த்தம் வேறுமாதிரியாகத்தான் இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரியில் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு கடந்த சனிக்கிழமை குடமுழுக்கு விழா நடந்தது. இதில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கலந்துகொண்டார்கள். பொதுவாக நெஞ்சை நிமிர்த்திப் பேசும் சேகர்பாபு, குடமுழுக்கு விழாவுக்கு எல்.முருகன் வந்தபோது அவர் பின்னால் பவ்யமாகச் சென்றார். ஏதோ தனது கட்சி விஐபி-யைப் போல எல்.முருகனை அத்தனை பணிவாக வரவேற்று உபசரித்தார். பாபு மட்டுமின்றி அவருடன் வந்திருந்த திமுகவினர் பலரும் எல்.முருகனுக்கு மறக்காமல் வணக்கம் வைத்தனர். திமுகவினரின் இந்த திடீர் ‘முருக வழிபாடு’ பாஜகவினரையே ஆச்சரியப்படவைத்துவிட்டது.