ஒரு காலத்தில், அறந்தாங்கி தொகுதியின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் சு.திருநாவுக்கரசர். அந்த அளவுக்கு தொகுதி மக்களின் சுகதுக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு, மக்களோடு மக்களாய் இருந்தார் அரசர். அதனால் தான், 2000-ல் இடைத்தேர்தல் நடந்தபோது, ஜெயலலிதாவின் தீவிர பிரச்சாரத்தையும் மீறி அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, திருநாவுக்கரசரால் நிறுத்தப்பட்ட க.அன்பரசனை ஜெயிக்க வைத்தார்கள் அறந்தை மக்கள். அந்தச் செல்வாக்கை தக்கவைக்க நினைத்த அரசர், இம்முறை கடுமையாகப் போராடி தனது மகன் எஸ்.டி. ராமச்சந்திரனுக்காக கங்கிரஸிடம் அறந்தாங்கியைக் கேட்டு வாங்கினார். மக்களும் அப்பாவைப் போல் பிள்ளையும் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரையே ஜெயிக்க வைத்தார்கள்.
ஆனால், அவர்களின் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டார் அரசரின் பிள்ளை. சென்னையிலேயே செட்டிலாகிவிட்ட ராமச்சந்திரன், எப்போதாவது ஒருமுறைதான் தொகுதிப் பக்கம் எட்டிப் பார்க்கிறாராம். அப்படியே வந்தாலும் அவசரகதியில் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, சென்னைக்கு யு-டர்ன் அடித்துவிடுகிறாராம். இதனால் தொகுதி மக்கள், தங்களின் அவசர உதவிகளுக்கு ஆளும்கட்சியின் ஒன்றிய செயலாளர்களையே அண்டவேண்டி இருக்கி்றதாம். நாலும் தெரிந்த அப்பாவாவது, அன்பு மகனுக்கு நல்லபுத்தி சொல்லக்கூடாதோ!