கடலூர் மாவட்ட திமுகவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இதுவரை அசைக்கமுடியாத சக்தியாக இருந்தார். ஆனால் அண்மைக்காலமாக, அருகிலுள்ள அரியலூர் மாவட்டத்து அமைச்சரான சிவசங்கரை கடலூருக்கு அனுப்பி பன்னீரை பதம்பார்த்துக் கொண்டிருக்கிறதாம் திமுக தலைமை. தலைமையே சிக்னல் கொடுத்துவிட்டதால் கடலூர் மாவட்டத்துக்குள் கட்சிப் பிரமுகர்களின் இல்ல நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள் என அடிக்கடி தலையைக் காட்டுகிறார் சிவசங்கர். பன்னீர்செல்வம் பவர்ஃபுல் மனிதர் என்றாலும் அண்மைக் காலமாக அவரது நடவடிக்கைகள் தலைமைக்கு எரிச்சலூட்டி இருப்பதாகச் சொல்கிறார்கள். துறை ரீதியான புகார்களில் சிக்கிய பன்னீர்செல்வம், உடல் நலமும் பாதிக்கப்பட்டார். போதாதுக்கு, மாவட்ட அரசியலில் மகனை முன்னிறுத்துவதும் அப்பாவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகன் தன்னை வளப்படுத்திக் கொள்வதும் திமுக தலைமை வரை புகாராக வாசிக்கப்பட்டதாம். இதையெல்லாம் உள்வாங்கிய பிறகே, சிவசங்கரின் கடலூர் என்ட்ரிக்கு சிக்னல் கொடுத்ததாம் திமுக தலைமை. இப்போது சிவசங்கருக்கு கடலூர் மாவட்டத்துக் குள்ளும் ஆதரவாளர்கள் பெருகிவருவது கூடுதல் தகவல்.