கடந்த அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவானது. புதிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தற்போது ஆட்சியர் அலுவலகம் கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்குத் தயாராய் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் கடைகளும் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கடைகளை வாடகைக்குப் பிடிப்பதற்காக அதிமுகவினர் உள்ளிட்ட சகல கட்சியினரும் முட்டி மோதினார்கள். ஆனால், மாவட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் யாருக்குச் சொல்கிறாரோ அவருக்குத்தான் கடை என்று கைவிரித்தார்களாம். கடைகள் ஒதுக்கும் விவகாரத்தை செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் நரேந்திரனிடம் ஒப்படைத்திருந்தாராம் அமைச்சர் அன்பரசன். நரேந்திரன் ’சொன்னபடி’ யாரெல்லாம் கேட்டார்களோ அவர்களுக்கே இப்போது கடைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறதாம். இதனால், ‘வெதச்சது நாம... வெள்ளாம எடுக்கிறது அவங்களா?’ என சற்றே கொந்தளித்துக் கிடக்கிறது செங்கல்பட்டு அதிமுக வட்டாரம்.