ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை தமிழகத்தில் நான்கு நாட்களும் வெற்றிகரமாக கொண்டு செலுத்த ரொம்பவே மெனக்கிட்டாராம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. ராகுலின் பயணம் குறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து கூட்டங்களை நடத்திய அழகிரி, காங்கிரஸ் தொண்டர்களை ஒருங்கிணைத்தாராம். அதேபோல் குமரி மாவட்டத்திலும் ஒரு வார காலம் முகாமிட்டு இதற்கான பணிகளைக் கவனித்து வந்தாராம் அழகிரி.
இத்தனையெல்லாம் செய்தாலும் ராகுலின் நடைபயணத்தின் போது, அழகிரிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லையாம். டெல்லியிலிருந்து வந்திருந்த காங்கிரஸ்காரர்கள் அழகிரியை ராகுலிடம் அவ்வளவு எளிதாக அண்டவே விடவில்லையாம். ராகுலின் பயணத் திட்டம் முழுவதையும் டெல்லிவாலாக்களே திட்டமிட்டார்களாம். கார்த்தி சிதம்பரம் சொன்னதைப் போலவே பயணத்தின் போது காங்கிரஸ் தொண்டர்களையும் ராகுல் சந்திக்க வேண்டும். அப்படிச் சந்தித்துப் பேசினால் கட்சிக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்” என்று அழகிரியும் சொன்னாராம். ஆனால், அந்த யோசனையும் எடுபடவில்லையாம். ராகுல் யாரை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் டெல்லி மக்களே பார்த்துக் கொண்டதால் அழகிரி டோட்டல் அப்செட்டாம். அதேசமயம், வழியில் ராகுல் சந்திக்க திட்டமிட்டிருந்த சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலருக்கு தமிழக காங்கிரஸ் தலைகள் மீது கடும் அதிருப்தி இருந்தது. அதனாலேயே அவர்கள் மூலமாக இல்லாமல் டெல்லியிலிருந்து வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் மூலமாக அவர்களைச் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது என்று ஒரு செய்தியும் காங்கிரஸ் வட்டாரத்தில் கடகடக்கிறது.