காரைக்குடி நகராட்சி சேர்மன் பதவி காரைக்குடி நகர திமுக செயலாளர் குணசேகரனுக்குத்தான் என நீண்ட நெடுங்காலமாகவே பேசிவைத்திருந்தார்கள். இந்தப் பதவியைப் பிடிக்க கடந்த 10 ஆண்டுகளாக பணத்தை விட்டுக் கொண்டிருந்தார் குணசேகரன். ஆனால், உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் குணசேகரனுக்கு போட்டியாக இன்னும் இரண்டு பேர் வந்தார்கள். அதில் முக்கியமானவர் முன்னாள் சேர்மன் முத்துத்துரை. இந்த நிலையில், குணசேகரனுக்குக் கொடுத்தால் முத்துத்துரையும் போட்டி வேட்பாளராக வருவார் என முடிவெடுத்த மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன், முத்துத்துரையின் பெயரையே தலைமைக்கு டிக் அடித்துக் கொடுத்தாராம். ஆனால் இதை குணசேகரனிடம் சொல்லாமல், “உங்களுக்குத் தான் சேர்மன் சீட்” எனச் சொல்லியே கடைசி வரை அவரை நம்ப வைத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு முதல் நாள் இரவுகூட தனது ஆதரவாளர்களிடம் பேசிய குணசேகரன். “எல்லாம் கரெக்டா போயிட்டு இருக்கு; எந்தப் பிரச்சினையும் இல்ல. நம்ம பேருதான் மேல போயிருக்கு” என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருந்தாராம் குணசேகரன்.
தேர்தல் நடந்த 4-ம் தேதி காலையில் மதுரையிலிருந்து புறப்பட்ட குணசேகரன் பிள்ளையார்பட்டியில் வந்து சாமிகும்பிட்டுவிட்டு நம்பிக்கையோடு காரைக்குடிக்கு வந்திருக்கிறார். அதுவரை ரகசியம் காத்த திமுக தலைமை, அவர் காரைக்குடி வந்து சேர்வதற்குள், ’சேர்மன் வேட்பாளர் முத்துத்துரை’ என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதைக் கேட்டு துவண்டே போனாராம் குணசேகரன். முத்துத்துரையின் வேட்பு மனுவை குணசேகரனையே முன்மொழிய வைத்து அவரை மேலும் வேதனைப்படுத்தினார்கள். ஆறுதலுக்காக குணசேகரனை வைஸ் சேர்மன் ஆக்கியவர்கள், அவரது கடன்களை எல்லாம் ஓரளவுக்கு செட்டில் செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்களாம்.