ஒரு காலத்தில் தஞ்சை அதிமுகவில் வைத்திலிங்கத்தின் வலதுகரமாக இருந்தவர் ஒரத்தநாடு காந்தி. ஆவின் சேர்மன், மாணவரணி செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் பவர் காட்டிய காந்திக்கு 2019 தஞ்சை இடைத் தேர்தலில் போட்டியிட சீட்டும் வாங்கிக் கொடுத்தார் வைத்தி. காந்தியின் டாம்பீகத்தால் தான் பலருக்கும் வைத்தி மீது அதிருப்தி ஏற்பட்டு கட்சியைவிட்டே கழன்றார்கள். ஆனாலும் காந்தியை கடுஞ்சொல் சொல்லாமல் காத்து வந்தார் வைத்தி. அப்படி செல்லமாக வளர்ந்த காந்தி, இப்போது வைத்திக்கு டாட்டா சொல்லிவிட்டு ஈபிஎஸ் அணியில் ஐக்கியமாகிவிட்டார். இதனால் செம கடுப்பில் இருக்கும் வைத்தி வட்டாரம், “ஒரத்தநாடு பக்கம் வரத்தானே வேணும்” என்று அலாரம் அடிக்கிறதாம். ஒரத்தநாட்டைத் தாண்டித்தான் காந்தி தனது சொந்த ஊரான திருமங்கலக்கோட்டைக்குச் செல்ல வேண்டும். அதுவும் வைத்திலிங்கத்தின் ஏரியா என்பதால் சொந்த ஊருக்குப் போனால் ஏதாவது அசம்பாவிதம் நடக்குமோ எனப் பயந்து போய்க்கிடக்கிறாராம் காந்தி.
போதாக்குறைக்கு, சோஷியல் மீடியா ரூட்டிலும் மறைமுகமாக மிரட்டல் விடுத்து காந்தியை கதிகலங்க வைக்கிறதாம் ஒரு கோஷ்டி!